Thursday, May 16, 2019

திருஞானசம்பந்தர் - 1

மூன்று வயது குழந்தை தோணியப்பர் குளக்கரையில் அழுது கொண்டு இருந்தது.....

எதற்காக அழுதது???

வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்து அழுத

பசிக்கு அழவில்லை சேக்கிழார் சொல்கிறார் அந்த குழந்தை தனது புனிதவாய் மலர்ந்து அழுகிறது

எதற்கு என்றால் வேதத்தின் நெறி தழைத்தோங்க, சைவ சமயம் வளரவும், சைவ சமயத்தை பற்றி வாழ்ந்து சிவபெருமானுக்கு தொண்டு புரியும் அடியார்கள் வளம் பெறவும் அழுகிறது ஒரு குழந்தை

யார் அந்த குழந்தை???

வேத நெறியும் சைவமும் வளர வேண்டும் என்பதற்காக அழுத குழந்தை யார் என தெரிந்து கொள்ளும் முன் அவர் அவதரித்த ஊர் அவரின் பொற்றோர்களை பற்றி காண்போம்.

அக்குழந்தை பிறந்த ஊர்

பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்

இவ்வாறு பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய தோணியப்பர் வீற்றிருக்கும் #சீர்காழி எனும் ஊரில் அவதரித்தார்.

இத்தகைய சிறப்பு மிகுந்த ஊரில் அந்தணர் மரபில் கௌண்டின்ய கோத்திரத்தில் வந்த சிவபாத இருதயார் என்பவர் வசித்து வந்தார்.

பெருமைமிகு சிவபாத இருதயார், தனது குலத்தில் தோன்றிய பகவதி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

சிவபாத இருதயாரும், பகவதி அம்மையாரும்

மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்

சைவத்தை பின்பற்றி சிவபெருமானை நித்தம் பூஜை செய்து தர்மநெறியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சிவபாத இருதயார் மனதில் சொல்வதற்கு முடியாத துயர் அடைந்தார் எதற்கு என்றால்

மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்

பிற சமயத்தாரால் சைவ சமயம் அருகி வருவதை கண்டு வருந்திய சிவபாத இருதயார்

மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்

இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்டு அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற்றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவம் செய்தார்.

தெய்வீக தம்பதியரின் தவத்தை மெச்சி தோணியப்பர் இவர்களுக்கு அருளும் பொருட்டு

அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க

சைவ நெறியும், வைதீக நெறியும், திருநீற்றின் பெருமை எண்திசையும் புகழ்பெற தோணியப்பரின் அருளோடு நவகிரகங்கள் வலிமையான நிலையில் இருக்க, நல்ல ஹோரையில் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் திருஅவதாரம் புரிந்தார் திருஞானசம்பந்த பெருமான்.

தொடரும்....

திருசிற்றம்பலம்

கட்டுரையாக்கம். பிரசன்ன வெங்கட்ராமன்

- PV

Friday, April 12, 2019

கல்வியின் பயன்

இக்காலத்தில் கல்வி கற்பது அந்த அறிவை கொண்டு பணம் படைக்க மட்டுமே பயன் படுத்துகிறோம்.

ஆனால் இலக்கியத்தில் பெரியோர்கள் சொல்கிறார்கள் கற்ற கல்வியை வைத்து இறைவனை கண்டறிவதே அதன் உண்மையான பயன் என்று. (மெய்பொருள் காண்பது அறிவு)

கல்வி கற்பதன் பயன் பற்றி இலக்கியத்தில்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

- வள்ளுவன்

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

-அருணகிரியார்

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானை

-மாணிக்கவாசகர்.

PV

Sunday, February 17, 2019

இறைவன் ஏன் பல வடிவங்களில் அருளுகிறார்?? சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

இறைவன் ஏன் பல வடிவங்களில் அருளுகிறார்??

சைவ சித்தாந்தம் இறைவன் நமக்கு அருள நான்கு நிலைகளில் இறங்கி வருவதாக கூறுகிறது.

ஸ்வரூபம், அரூபம்,.அருஉருவம்,உருவம் என நான்கு நிலைகள்.

இதில் உருவ வழிபாட்டில் மட்டும் ஏன் இத்தனை உருவங்கள் இறைவனுக்கு.

இறைவனுக்கு இது தான உருவம் இது தான் பெயர் இது தான் நிறம் என்று எல்லாம் சொல்ல முடியாது அப்பர் சுவாமிகள் இதனை கூறியிருக்கிறார்.

அப்படி வரையறுக்க முடியாத இறைவனின் திருமேனிக்கு ஏன் இத்தனை உருவங்கள் வைத்தனர்.

இந்த உருவ வழிபாடு என்பது ஆரம்ப நிலை வழிபாடு அதாவது சரியை நிலை வழிபாடு என்பதை முன்னரே பார்த்தோம்.

தடத்த நிலையில் சிவபெருமான் சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர் என 64 விதமான உருவங்களில் அருளுகின்றார்.

ஏன் ஒரு மூர்த்தம் போதாதா? 64 விதமான வடிவங்கள் எதற்கு? என்ற கேள்வி வரும் அதற்கு சைவ சித்தாந்தம் தரும் விளக்கம்

போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர்.

இந்த 64 உருவங்களில் சில வடிவங்கள் போக ரூபமாகவும்,.சில வடிவங்கள் கோர ரூபமாகவும், சில வடிவங்கள் யோக ரூபமாகவும் உள்ளன.

இவை போகத்தை வேண்டுவோருக்கு போகத்தையும், மலத்தை அழித்து ஞானத்தை வழங்க கோர முகமாகவும், யோகத்தை வழங்க யோக ரூபமாகவும் அருளுகின்றார்.

அவரவர் மனநிலை பொருத்தே அவர்களின் மனம் சார்ந்து இறைவனை நாம் எப்படி காண்கிறோமோ அப்படி அருளுகின்றார்.

- #PV

கட்டுரையாக்கம். பிரசன்ன வெங்கட்ராமன்

Friday, February 8, 2019

நான்கு வித வழிபாட்டு நிலைகள்

இறைவனை அடைய முன்னோர்கள் வகுத்த அடிப்படையான நான்கு வழிகள்

1.சரியை
2.கிரியை
3.யோகம்
4.ஞானம்

இதில் ஒவ்வொரு படிநிலைகளாக கடந்து தான் இறுதியில் ஞானத்தை அடைய முடியும்.

இந்த நான்கு பிரிவுகளில் நான்கு உட்பிரிவுகளாக ஆக பதினாறு படிநிலைகளை அமைத்துள்ளார்கள்.

1. சரியையில் சரியை
2. சரியையில் கிரியை
3. சரியையில் யோகம்
4. சரியையில் ஞானம்

5. கிரியையில் சரியை
6. கிரியையில் கிரியை
7. கிரியையில் யோகம்
8. கிரியையில் ஞானம்

9. யோகத்தில் சரியை
10. யோகத்தில் கிரியை
11. யோகத்தில் யோகம்
12. யோகத்தில் ஞானம்

13. ஞானத்தில் சரியை
14. ஞானத்தில் கிரியை
15. ஞானத்தில் யோகம்
16. ஞானத்தில் ஞானம்

இப்படி ஒவ்வொன்றிலும் நான்கு பிரிவுகள் உள்ளன.

சைவ குரவர்கள் நால்வர் இதில் ஒவ்வொன்றை பின்பற்றினார்கள்.

திருநாவுக்கரசர் - சரியை

திருஞானசம்பந்தர்- கிரியை

சுந்தரர் - யோகம்

மாணிக்கவாசகர் - ஞானம்

சரியை
உடம்பினால் இறைவனுக்கு செய்யும் திருப்பணிகள் ஆகும்.

கிரியை
தனது ஆத்ம மூர்த்தியை அகத்திலும் புறத்திலும் வழிபடுவது ( உரிய வழிமுறைகளை பின்பற்றி )

யோகம்
அட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திட சித்தமுடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

ஞானம்
ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும்.

இந்த நான்கு படிநிலைகளில் ஒவ்வொரு படிநிலைகளாக உணர்ந்து கடந்தால் தான் ஞானம் எனும் பெரும் பேறு கிட்டும்.

இது நான்கு நிலைகளை பற்றிய சிறு அறிமுகம் மட்டுமே. மீண்டும் விரிவாக பார்ப்போம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவனை நம்முள் உணர முயல்வோம்.

- Prasanna Venkatraman

சைவ சித்தாந்தம் உணர்த்தும் இறைநிலை

இன்றைய அறிவியலும் நிரூபிக்க முடியாத ஒரு விஷயம் உண்டு எனில் உயிரும் உடலும் வேறானதா? ஒரு மனிதனின் இறப்புக்கு பின் என்ன நிகழும்? என்பதே.

நமது இந்து தர்மமும் அதனை சார்ந்த சமயங்களும் உடலும் உயிரும் வேறு உடலுக்கு மட்டுமே அழிவு உயிருக்கு அழிவு இல்லை என்றே கூறுகிறது.

இந்த உலகில் பிறப்பு என்பது இந்த ஆன்மாவின் கண்மமலத்தை அழிப்பதற்காகவே தனது ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா அனுபவ வயப்பட்டு தனது கண்மத்தை அழிக்கியது.

ஒவ்வொரு பிறவி எடுக்கும் போது தனது அனுபவத்தால் கண்மாவை ஒழித்து பழைய கர்மாவின் காரணமாக அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கிறது.

இப்படி அனுபவ வயப்பட்டு அதனை அழிக்க மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

என அருளினார்.

அப்படி பிறவி எடுக்கும் ஆன்மாவிற்கு உதவும் வண்ணம் இறைவன் படைத்தது 24 கருவிகள் அவையே 24 ஆன்ம தத்துவங்களாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.

தனு, கரண, புவன, போகம் என்னும் கருவிகளுடன் தனது கண்மத்தை அழிக்க  இயங்கும் ஆன்மாவிற்கு உதவ இறைவன் நான்கு நிலைகளில் இறங்கி வருகிறார்.

இறைவனுக்கு இரு நிலைகள் உண்டு ஸ்வரூப நிலை,  தடத்த நிலை.

இதில் தடத்த நிலையில் நான்கு

1. உருவம் (சோமாஸ்கந்தர்)

2. அருஉருவம் (லிங்கம்)

3. அரூபம் (உருவம் இல்லாதது)

4. ஸ்வரூபம் (கற்பனைக்கு அப்பாற்பட்டது)

இதனை சுத்தவித்தை, ஈஸ்வரம், சதாசிவம், சக்தி, சிவம் (நாதம், விந்து) எனவும் சொல்வர்.

இந்த நான்கு நிலை வழிபாட்டுக்கும் நான்கு நிலை உண்டு.

சரியை, கிரியை, யோகம், ஞானம்

சைவ சித்தாந்தம் உணர்த்தும் இந்த நான்கு விதமான வழிபாட்டு முறைகளை அடுத்த பதிவில் பதிகின்றேன்.

காசு கொடுத்து மிகப்பிரமண்டாமா சிலை வைத்து யோகம் சொல்லி தராங்களே அப்படி அங்கு உட்கார்ந்த உடன் யேகமானது சித்திக்குமா??

அதற்கு முந்தைய சரியை, கிரியை கடந்தால் மட்டுமே யோகமானது சித்திக்கும் இப்படி  சரியை, கிரியை எனும் இரு நிலைகளில் அடங்காத மனம் எப்படி நேரடி பதவிஉயர்வு போல யோகத்தில் நிற்குமா?? சரி இந்த நான்கு நிலைகளை பற்றி பின்னர் பார்ப்போம்.

முன்னர் கூறியது போல் கற்பனைக்கு அப்பாற்பட்ட இறைவனை எப்படி காண்பது அது தான் இறுதி நிலை. கற்பனைக்கு எட்டாத ஒரு வஸ்துவை எப்படி உள்ளது என நம்புவது என்ற கேள்விகள் வரலாம்.

அதனை உணரத்தான் இந்த நான்கு நிலை வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளார்கள்.

சரியை என்பது தொடக்கப்பள்ளி போன்றது அங்கு முதல் வகுப்பு மாணவனிடம் பிதாகரஸ் தேற்றத்தை விளங்க வைக்க முடியுமா?? அப்படித்தான் சரியை நிற்பவரிடம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வஸ்து என கூற முடியாது. அந்த நிலைக்கு வழிபட ஒரு உருவம் தேவை எனவே தான் நமது கோவில்களில் உருவ வழிபாடு வைத்தார்கள்.

சரி நமது சைவமும் சைவப்பெரியோர்களும் இந்த நான்கு நிலைகளில் நின்று அருளியதை பார்ப்போம்.

முன்னர் சொன்னாற்போல சரியை, கிரியை, ஞானம், யோகம் என பலபடிகள் வைத்தார்களே அந்த ஒவ்வொரு நிலைக்கும் இறைவன் ஸ்வரூபம், அரூபம், அருஉருவம், உருவம் என நான்கு நிலைகளில் அருள்பாளிக்கிறார்.

திருநாவுக்கரச பெருமான்

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

அப்பர் பெருமான் தான் ரசித்த கருணை கடவுளை இப்படியும் சொல்கிறார்.

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

அதாவது இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன்.

அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன்.

அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

தெய்வ சேக்கிழார்  உலகெலாம் உணர்ந்தும் ஓதுவதற்கு அரியவன் எம் சிவ பெருமான் என்றார்.

கருணை ஈசனை மாணிக்கவாசகரும் "காண்பரிய பேரொளி" என்றே கூறுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடாக அப்பர் பெருமானும், மாணிக்கவாசகரும், சேக்கிழாரும் கூறிய அருள் மொழிகள் இவை

காண்பதற்கு அரிய பேரொளியை உணர்ந்து  ஓதுவதற்கு அரிய சிவத்தை எங்கு காண்பது எப்படி உணர்வது

இதற்கு பதில் தருகிறார் திருமூலர்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

அன்பும் சிவமும் வேறில்லை இரண்டும் ஒன்றே அன்பே சிவம் என உணர்ந்து அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பை செலுத்தி ஜீவகாருண்யத்துடன் வாழ்ந்தால் அந்த காண்பரிய பேரொளியை நம்முள்ளே காணலாம்.

இதுவே சைவம் காட்டும் பாதை. இப்பாதையை பின்பற்றி கல் முதல் விலங்கு, பறவை, மனிதர் என அனைத்து ஜீவனிலும் சிவத்தை கண்டு அதன்பால் அன்பு காட்டி நமக்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டினார்கள் நம் சைவப்பெரியோர்கள்.

நாமும் அப்பாதையிலே சென்று அந்த காண்பரிய பேரொளியை நம்முள்ளே கண்டு இந்த பிறப்பு இறப்பு எனும் சுழற்ச்சியில் விடுபட்டு அவனருளாளே அவன் தாழ் புகுவோமாக.

திருசிற்றம்பலம்.

கட்டுரையாக்கம்: பிரசன்ன வெங்கட்ராமன்.

Sunday, November 18, 2018

பதினெட்டு புராணங்கள்

வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நமது புராணங்கள் எளிய கதைகள் மூலம் எடுத்துரைத்து மக்களை தர்ம வழியில் ஈடுபட தூண்டுகின்றன அதில் 18 முக்கிய புராணங்கள் ஆகும் அவை

म - द्वयं भ - द्वयं चैव ब्र - त्रयं व - चतुष्टयम्।
अ - ना - प - लिङ् - ग - कु - स्का - नि पुराणानि प्रचक्षते॥

ம-த்வயம் ப-த்வயம் சைவ ப்ர-த்ரயம் வ-சதுஷ்டயம்।
அ-நா-ப-லிங்- க-கூ-ஸ்கா-நி புராணாநி ப்ரசக்ஷதே॥

அதாவது ம என்று ஆரம்பிக்கும் இரு புராணங்கள்

மத்ஸ்ய புராணம்,

மார்கண்டேய புராணம்

ப என்று ஆரம்பிக்கும் இரண்டு புராணங்கள்

பாகவத புராணம்,

பவிஷ்ய புராணம்

ப் என்று ஆரம்பிக்கும் மூன்று புராணங்கள்
ப்ரஹ்மாண்ட புராணம்,

ப்ரஹ்மவைவர்தக புராணம்,

ப்ரஹ்ம புராணம்

வ என்று தொடங்கும் நான்கு புராணங்கள்

வாமந புராணம்

வராஹ புராணம்

விஷ்ணு புராணம்

வாயு புராணம்

அ என்று தொடங்கும் அக்னி புராணம்

நா என்று தொடங்கும் நாரத புராணம்

ப என்று தொடங்கும் பத்ம புராணம்

லிங் என்று தொடங்கும் லிங்க புராணம்

க என்று தொடங்கும் கருட புராணம்

கூ என்று தொடங்கும் கூர்ம புராணம்

ஸ்க என்று தொடங்கும் ஸ்கந்த புராணம்

என பதினெட்டு புராணங்கள் உள்ளன.

- Prasanna Venkatraman

Sunday, November 11, 2018

ஆஸ்திக தர்சனம் - நாஸ்திக தர்சனம்


இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் கண்களுக்கு புலப்படாத வஸ்துக்கள் உண்டு. இவைகள் அனைத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. (விஞ்ஞான ரீதியாக கூட இது நிரூபிக்கப்பட்டது)

அதன் இயல்புகளை ஆய்வு செய்வது தான் தர்சனம் எனப்படும் தர்சனம் இரு வகைப்படும் அவை

ஆஸ்திகம், நாஸ்திகம்

இதற்கு பொருள் கடவுள் உண்டு கடவுள் இல்லை என்பது அல்ல. உண்மையான பொருள்

வேதத்தை ஆதாரமாக கருதும் தர்சனம் ஆஸ்திக தர்சனம் அதாவது வைதிக தர்சனம் (वैदिक दर्शनम्) என்றும்

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத தர்சனம் நாஸ்திக தர்சனம் அதாவது அவைதிக தர்சனம் (अवैदिक दर्शनम्) என்றும் பெயர்.

இதில் ஆஸ்திக தர்சனம் மற்றும் நாஸ்திக தர்சனம் முறையே ஆறு மற்றும் மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

ஆஸ்திக தர்சனங்கள் ஆறு அவை

1. ஸாங்க்யம் (साङ्ख्यः)

2. யோகம் (योगः)

3. ந்யாயம் (न्यायः)

4. வைஶேஷிகம் (वैशेषिकम्)

5. பூர்வ - மீமாம்ஸா (पूर्व - मीमांसा)

6. உத்ர - மீமாம்ஸா / வேதாந்தம் (वेदात्तः)

நாஸ்திக தர்சனங்கள் மூன்று அவை

1. சார்வாகம் (चार्वाकम्)

2. ஜைநம் (जैनम्)

3. பௌத்தம் (बौद्धम्)

பௌத்தம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது

1. ஸௌத்ராந்திகம் (सौत्रन्तिकम्)

2. வைபாஷிகம் (वैभाषिकम्)

3. மாத்யமிகம் (माध्यामिकम्) - சூன்யவாதம் என்றும் பெயர்

4. யோகாசாரம் (योगाचारम्) - விஞ்ஞானவாதம் என்றும் அழைப்பர்.

- Prasanna Venkatraman