மூன்று வயது குழந்தை தோணியப்பர் குளக்கரையில் அழுது கொண்டு இருந்தது.....
எதற்காக அழுதது???
வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்து அழுத
பசிக்கு அழவில்லை சேக்கிழார் சொல்கிறார் அந்த குழந்தை தனது புனிதவாய் மலர்ந்து அழுகிறது
எதற்கு என்றால் வேதத்தின் நெறி தழைத்தோங்க, சைவ சமயம் வளரவும், சைவ சமயத்தை பற்றி வாழ்ந்து சிவபெருமானுக்கு தொண்டு புரியும் அடியார்கள் வளம் பெறவும் அழுகிறது ஒரு குழந்தை
யார் அந்த குழந்தை???
வேத நெறியும் சைவமும் வளர வேண்டும் என்பதற்காக அழுத குழந்தை யார் என தெரிந்து கொள்ளும் முன் அவர் அவதரித்த ஊர் அவரின் பொற்றோர்களை பற்றி காண்போம்.
அக்குழந்தை பிறந்த ஊர்
பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
இவ்வாறு பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய தோணியப்பர் வீற்றிருக்கும் #சீர்காழி எனும் ஊரில் அவதரித்தார்.
இத்தகைய சிறப்பு மிகுந்த ஊரில் அந்தணர் மரபில் கௌண்டின்ய கோத்திரத்தில் வந்த சிவபாத இருதயார் என்பவர் வசித்து வந்தார்.
பெருமைமிகு சிவபாத இருதயார், தனது குலத்தில் தோன்றிய பகவதி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.
சிவபாத இருதயாரும், பகவதி அம்மையாரும்
மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்
சைவத்தை பின்பற்றி சிவபெருமானை நித்தம் பூஜை செய்து தர்மநெறியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சிவபாத இருதயார் மனதில் சொல்வதற்கு முடியாத துயர் அடைந்தார் எதற்கு என்றால்
மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்
பிற சமயத்தாரால் சைவ சமயம் அருகி வருவதை கண்டு வருந்திய சிவபாத இருதயார்
மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்
இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்டு அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற்றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவம் செய்தார்.
தெய்வீக தம்பதியரின் தவத்தை மெச்சி தோணியப்பர் இவர்களுக்கு அருளும் பொருட்டு
அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க
சைவ நெறியும், வைதீக நெறியும், திருநீற்றின் பெருமை எண்திசையும் புகழ்பெற தோணியப்பரின் அருளோடு நவகிரகங்கள் வலிமையான நிலையில் இருக்க, நல்ல ஹோரையில் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் திருஅவதாரம் புரிந்தார் திருஞானசம்பந்த பெருமான்.
தொடரும்....
திருசிற்றம்பலம்
கட்டுரையாக்கம். பிரசன்ன வெங்கட்ராமன்
- PV
No comments:
Post a Comment