இன்றைய அறிவியலும் நிரூபிக்க முடியாத ஒரு விஷயம் உண்டு எனில் உயிரும் உடலும் வேறானதா? ஒரு மனிதனின் இறப்புக்கு பின் என்ன நிகழும்? என்பதே.
நமது இந்து தர்மமும் அதனை சார்ந்த சமயங்களும் உடலும் உயிரும் வேறு உடலுக்கு மட்டுமே அழிவு உயிருக்கு அழிவு இல்லை என்றே கூறுகிறது.
இந்த உலகில் பிறப்பு என்பது இந்த ஆன்மாவின் கண்மமலத்தை அழிப்பதற்காகவே தனது ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா அனுபவ வயப்பட்டு தனது கண்மத்தை அழிக்கியது.
ஒவ்வொரு பிறவி எடுக்கும் போது தனது அனுபவத்தால் கண்மாவை ஒழித்து பழைய கர்மாவின் காரணமாக அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கிறது.
இப்படி அனுபவ வயப்பட்டு அதனை அழிக்க மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
என அருளினார்.
அப்படி பிறவி எடுக்கும் ஆன்மாவிற்கு உதவும் வண்ணம் இறைவன் படைத்தது 24 கருவிகள் அவையே 24 ஆன்ம தத்துவங்களாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.
தனு, கரண, புவன, போகம் என்னும் கருவிகளுடன் தனது கண்மத்தை அழிக்க இயங்கும் ஆன்மாவிற்கு உதவ இறைவன் நான்கு நிலைகளில் இறங்கி வருகிறார்.
இறைவனுக்கு இரு நிலைகள் உண்டு ஸ்வரூப நிலை, தடத்த நிலை.
இதில் தடத்த நிலையில் நான்கு
1. உருவம் (சோமாஸ்கந்தர்)
2. அருஉருவம் (லிங்கம்)
3. அரூபம் (உருவம் இல்லாதது)
4. ஸ்வரூபம் (கற்பனைக்கு அப்பாற்பட்டது)
இதனை சுத்தவித்தை, ஈஸ்வரம், சதாசிவம், சக்தி, சிவம் (நாதம், விந்து) எனவும் சொல்வர்.
இந்த நான்கு நிலை வழிபாட்டுக்கும் நான்கு நிலை உண்டு.
சரியை, கிரியை, யோகம், ஞானம்
சைவ சித்தாந்தம் உணர்த்தும் இந்த நான்கு விதமான வழிபாட்டு முறைகளை அடுத்த பதிவில் பதிகின்றேன்.
காசு கொடுத்து மிகப்பிரமண்டாமா சிலை வைத்து யோகம் சொல்லி தராங்களே அப்படி அங்கு உட்கார்ந்த உடன் யேகமானது சித்திக்குமா??
அதற்கு முந்தைய சரியை, கிரியை கடந்தால் மட்டுமே யோகமானது சித்திக்கும் இப்படி சரியை, கிரியை எனும் இரு நிலைகளில் அடங்காத மனம் எப்படி நேரடி பதவிஉயர்வு போல யோகத்தில் நிற்குமா?? சரி இந்த நான்கு நிலைகளை பற்றி பின்னர் பார்ப்போம்.
முன்னர் கூறியது போல் கற்பனைக்கு அப்பாற்பட்ட இறைவனை எப்படி காண்பது அது தான் இறுதி நிலை. கற்பனைக்கு எட்டாத ஒரு வஸ்துவை எப்படி உள்ளது என நம்புவது என்ற கேள்விகள் வரலாம்.
அதனை உணரத்தான் இந்த நான்கு நிலை வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளார்கள்.
சரியை என்பது தொடக்கப்பள்ளி போன்றது அங்கு முதல் வகுப்பு மாணவனிடம் பிதாகரஸ் தேற்றத்தை விளங்க வைக்க முடியுமா?? அப்படித்தான் சரியை நிற்பவரிடம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வஸ்து என கூற முடியாது. அந்த நிலைக்கு வழிபட ஒரு உருவம் தேவை எனவே தான் நமது கோவில்களில் உருவ வழிபாடு வைத்தார்கள்.
சரி நமது சைவமும் சைவப்பெரியோர்களும் இந்த நான்கு நிலைகளில் நின்று அருளியதை பார்ப்போம்.
முன்னர் சொன்னாற்போல சரியை, கிரியை, ஞானம், யோகம் என பலபடிகள் வைத்தார்களே அந்த ஒவ்வொரு நிலைக்கும் இறைவன் ஸ்வரூபம், அரூபம், அருஉருவம், உருவம் என நான்கு நிலைகளில் அருள்பாளிக்கிறார்.
திருநாவுக்கரச பெருமான்
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
அப்பர் பெருமான் தான் ரசித்த கருணை கடவுளை இப்படியும் சொல்கிறார்.
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே
அதாவது இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன்.
அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன்.
அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
தெய்வ சேக்கிழார் உலகெலாம் உணர்ந்தும் ஓதுவதற்கு அரியவன் எம் சிவ பெருமான் என்றார்.
கருணை ஈசனை மாணிக்கவாசகரும் "காண்பரிய பேரொளி" என்றே கூறுகிறார்.
ஞானத்தின் வெளிப்பாடாக அப்பர் பெருமானும், மாணிக்கவாசகரும், சேக்கிழாரும் கூறிய அருள் மொழிகள் இவை
காண்பதற்கு அரிய பேரொளியை உணர்ந்து ஓதுவதற்கு அரிய சிவத்தை எங்கு காண்பது எப்படி உணர்வது
இதற்கு பதில் தருகிறார் திருமூலர்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
அன்பும் சிவமும் வேறில்லை இரண்டும் ஒன்றே அன்பே சிவம் என உணர்ந்து அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பை செலுத்தி ஜீவகாருண்யத்துடன் வாழ்ந்தால் அந்த காண்பரிய பேரொளியை நம்முள்ளே காணலாம்.
இதுவே சைவம் காட்டும் பாதை. இப்பாதையை பின்பற்றி கல் முதல் விலங்கு, பறவை, மனிதர் என அனைத்து ஜீவனிலும் சிவத்தை கண்டு அதன்பால் அன்பு காட்டி நமக்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டினார்கள் நம் சைவப்பெரியோர்கள்.
நாமும் அப்பாதையிலே சென்று அந்த காண்பரிய பேரொளியை நம்முள்ளே கண்டு இந்த பிறப்பு இறப்பு எனும் சுழற்ச்சியில் விடுபட்டு அவனருளாளே அவன் தாழ் புகுவோமாக.
திருசிற்றம்பலம்.
கட்டுரையாக்கம்: பிரசன்ன வெங்கட்ராமன்.